ரயில்வே செயல்பாடுகளை வலுபடுத்தவும், பயணிகள் விதிமுறைகளை மீறுவதை குறைக்கும் நோக்கில் இந்திய ரயில்வே சட்டம் 1989-ல் பல்வேறு திருத்தங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ரயில்களில் மகளிர் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கான அபராதம் 500 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ரயில்களில் உரிய பயணச் சீட்டின்றி பயணிப்பவர்களுக்கான அபராதத் தொகை 250 ரூபாயிலிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை 250-லிருந்து 500-ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல, அதிகபட்ச அபராதத் தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்நிலையங்களில் அனுமதியின்றி விற்பனை செய்தால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பயணித்தால், 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், ஆபத்தான பொருட்களை ரயில்களில் கொண்டு சென்றால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் புகைப்பிடித்தால், 2,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த திருத்தப்பட்ட புதிய அபராத விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.