கோயில் தங்கத்தை பணமாக்குதல் என்பது வதந்தி என்றும் அந்தக் கூற்றுகளை 'பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை' என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கோயில்களில் உள்ள தங்கத்தை விற்று பணமாக மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கியுள்ளது. இதுதொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோயில் கோபுரங்கள், கதவுகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கம், கோயில் அறக்கட்டளைகள் வசம் உள்ள தங்கம் அரசின் கையிருப்பாக கருதப்படுபவை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது. தங்கம் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டில் ஏற்கெனவே கையிருப்பில் உள்ள தங்கத்தை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோயில் நகைகளை விற்று அரசு பணமாக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்பவோ அல்லது பிறருக்குப் பகிரவோ வேண்டாம் என்று அமைச்சகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது; தவறான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.