இந்தியா

மாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோடி நிதி: விடுவித்தது மத்திய நிதியமைச்சகம் !

jagadeesh

கொரோனா பிரச்னையால் மாநில அரசுகளின் நிதிநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இத்தொகையில் 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மாநில பேரிடர் சமாளிப்பு நிதியில் முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி வருவாய் பற்றாக்குறை மானிய வகையில் 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்கள் பலன் பெறும். கொரோனா பிரச்னை தீவிரமாக உள்ள இச்சூழலில் மாநில அரசுகளின் நிதிநிலை மேம்பட தங்கள் நடவடிக்கை உதவும் என்றும் மத்திய நிதியமைச்சர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அண்மையில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை விரைந்து விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் மாநில அரசுகள் கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.