யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது. யெஸ் வங்கி முதலீட்டார்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உத்தரவாதம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.