கடற்கரையில் மணலில் சிக்கிய ஃபெராரி காரை கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியது. முன்னதாக, அந்த காரை சுற்றுலாப் பயணிகள் இருவர் இன்று காலை கடற்கரைக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போதுதான் அந்த கார் மண்ணில் புதைந்துள்ளது.
இதையடுத்து அந்த காரை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து ஃபெராரி காரின் முன்பக்கத்தில் கயிறு கட்டி ஒரு மாட்டு வண்டி மூலம் இழுத்து வெளியேற்றியுள்ளனர். இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும் இந்த தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.