ஏர் இந்தியா முகநூல்
இந்தியா

”விபத்துக்குள்ளாக்குவேன்” - ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல் விடுத்த பெண் மருத்துவர் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

Prakash J

குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, நேற்று பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் சூரத் செல்ல தயாராக இருந்தது. அப்போது, ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20Fஇல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும், பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.

இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, விமானி புகார் அளித்ததன் பேரில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.