கர்நாடகாவில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்து பின்னர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அத்தகைய துயரத்திற்கு இடையிலும் பெற்றோர் தானமாக அளித்து பாராட்டுதலை பெற்றுள்ளனர்.
இந்த தகவலை ட்விட்டரில் கர்நாடக அமைச்சர் சுதாகர் பதிவிட்டுள்ளார். கோலார் மாவட்டத்தின் சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது சைத்ரா என்ற பெண்ணின் திருமண வரவேற்பில் இந்த சோக நிகழ்வு நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைத்ரா, மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இதயத்தை நொறுக்கும் துயரத்திற்கு இடையிலும் மகளின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்க முன்வந்ததாக அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.