இந்தியா

இதுக்கெல்லாமா துப்பாக்கிச் சூடு நடத்துறது! - நள்ளிரவில் டெல்லியை பரபரப்பாக்கிய சம்பவம்

JustinDurai

சில நேரங்களில் சாதாரண வாக்குவாதங்கள் கூட கொலையில் முடிந்துவிடுகின்ற சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் கிருஷ்ணகிரியிலும் நடந்தேறியது. துணி துவைப்பதில் தொடங்கிய சிறிய வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்தது. இப்படித்தான், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.

டெல்லி மாநிலம் பஜன்புரா பகுதியில் வியாழக்கிழமை இரவு திருமணத்துக்கு சென்றுவிட்டு தந்தையும் மகனும் காரில் நள்ளிரவு வீடு திரும்பி உள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சாலையில் பார்க்கிங் செய்ய முடியாதபடி, தனது காரை நிறுத்தியிருக்கிறார். உடனே இருவரும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்து ஓரமாக நிறுத்துமாறு, பக்கத்து வீட்டுக்காரரிடம் கூறியதாகத் தெரிகிறது. அப்போது இவர்களுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியிருக்கிறது. இரு குடும்பத்தினரும் மாறி மாறி தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததில், நள்ளிரவில் இரு குடும்பத்தினருக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. இதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டெல்லி போலீசார்,"இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்திருக்கிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்திருக்கின்றனர்.