இந்தியா

’சீருடைக்கு காசு கேட்டு வகுப்பறைக்குள் வாளுடன் வந்த தந்தை’ - பீகாரில் பகீர் சம்பவம்!

JananiGovindhan

பள்ளி சீருடைக்கு காசு தரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை ஒருவர் வாளுடன் வகுப்பறைக்குள் சென்று மிரட்டிய சம்பவம் பீகாரில் உள்ள அராரியா பகுதியில் அரங்கேறியிருக்கிறது.

ஜோகிஹட் காவல்நிலைய அதிகாரி இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கூறியிருப்பதாவது,

"பள்ளி சீருடைக்கு பணம் கிடைக்காததால் தந்தை ஒருவர் வாளுடன் தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தியிருக்கிறார். மேலும், 24 மணி நேரத்திற்குள் பணம் தராவிட்டால், மீண்டும் வருவேன் என, ஆசிரியர்களை மிரட்டவும் செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் பகவான்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோகிஹாட் பகுதியில் நடந்துள்ளது. பள்ளியில் வகுப்பு நடைபெறும் அறைக்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டியவர் அக்பர் என கண்டறியப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து அந்த நபர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர், ஜோகிஹாட் BDOவிடம் புகார் செய்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வாள் ஏந்திய நபர் ஒருவர் வந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோவும், ஃபோட்டோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.