சுப்கரண் சிங்
சுப்கரண் சிங் ட்விட்டர்
இந்தியா

போராட்டத்தில் இளம்விவசாயி பலி: பிரேதப் பரிசோதனை தடுத்து நிறுத்தம்.. விவசாயிகள் வைக்கும் கோரிக்கை!

Prakash J

விவசாயிகள் போராட்டம்: இளம் விவசாயி பலி!

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். முன்னதாக, விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தச் சுமுகமும் ஏற்படவில்லை. இதையடுத்து, விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேறும் வகையில் திட்டமிட்டனர். இதற்காக பிப்.21 ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் ஷம்பு எல்லைக்குக் கொண்டுவந்ததால் பதற்றம் உருவாகியது. மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைப் பிரிக்கும் கானௌரி எல்லை அருகே விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

காங். எம்.பி. ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

சுப் கரண் சிங் எனக் கண்டுகொள்ளப்பட்ட அந்த இளம் விவசாயி, காயம் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது. போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக விவசாயி தலைவர் சர்வான் பந்தேர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தச் சம்பவத்தை ஹரியானா காவல் துறை மறுத்திருந்தது. எனினும், சுப் கரணின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அதேநேரத்தில் சுப் கரண் சிங் மரணம் தொடர்பாக பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரேதப் பரிசோதனை நிறுத்திவைப்பு!

இந்த நிலையில், இளம் விவசாயியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்திருப்பதுடன், அதைத் தடுத்தும் நிறுத்தியுள்ளனர். விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், ‘பஞ்சாப் அரசு அவரை தியாகி என அறிவித்து, அதற்கேற்ப சலுகைகளை வழங்க வேண்டும். மேலும், பிரேதப் பரிசோதனையை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டில் ஒரு பகுதியாக மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்’ என அவர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக, அவரது பிரேதப் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியலில் புயலைக் கிளப்பும் விவசாயியின் மரணம்

மரணமடைந்த இளம் விவசாயியான சுப்கரண் சிங், பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பலோக் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தந்தை மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. மற்றொருவர் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. சுப்கரண் சிங்கிற்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர், ’மூத்த சகோதரியை திருமணம் செய்துகொடுத்த விதத்தில் அவர் நிறைய கடன் வாங்கியுள்ளார்’ எனத் தெரிவித்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், விவசாயிகளைத் தடுக்க ஆம் ஆத்மி அரசாங்கம் ஹரியானா காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக பஞ்சாபில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இளம் விவசாயியின் மரணம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.