இந்தியா

உ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்!

உ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்!

webteam

உத்தரபிரதேசக் கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை இன்று சந்தித்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து, கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைகளை மறித்தனர். உள்ளூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சி செய்தனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் அவர் போராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. அதே போல், போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவரும் பலியானார்.

பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அந்தப் பகுதி சாலைக்கு மறைந்த இன்ஸ்பெக்டரின் பெயர் வைக்கப்படும் என்றும் மாநில அமைச்சர் அதுல் கார்க் தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த காவலர் சுபோத் குமார் சிங்குக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மறைந்த சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் இன்று சந்தித்தனர். 
இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றும் கல்வி கடன் உள்ளிட்டவற்றை அரசு செலுத்திக்கொள்ளும் என்று முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் மறைந்த இன்ஸ்பெக்டரின் மகன் தெரிவித்துள்ளார்.