இந்தியா

"போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்!"- திருப்பதி தேவஸ்தானம்

jagadeesh

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டை வீட்டுக்கே அனுப்புவதாகக்கூறி விளம்பரப்படுத்திய போலி இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினால், பயனாளர்களின் வீட்டு முகவரிக்கே திருப்பதி லட்டு அனுப்பி வைக்கப்படும் என்று இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டதை திருப்பதி தேவஸ்தானம் கவனத்தில் கொண்டு வந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த போலி இணையதளம் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் தங்களது இணையதள குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக அந்த இணையதளத்தை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த போலி இணையதளத்தில் ஒரு முறை ஒரு லட்டை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்க ரூ.500 என்றும், ஒருவர் ரூ.5,000 செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்டுக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ரூ.9600 செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா இரண்டு லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் நான்கு லட்டு கேட்பவர்களுக்கு ரூ.1000 மட்டுமே கட்டணம் என்ற சிறப்புச் சலுகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அழைப்பை எடுத்த நபர், தான் சித்தூர் நகரைச் சேர்ந்த சைதன்யா என்றும், ஒரு நிறுவனம், இந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேச தன்னை மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு வேலைக்கு நியமித்திருப்பதாகவும், பணியில் சேர்ந்து ஒரு சில நாள்களே ஆவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து https://balajiprasadam.com/ என்ற முகவரியில் இயங்கி வந்த இந்த இணையதளம் தற்போது முடக்கப்பட்டு, இந்த இணையதளத்தில் கூறப்பட்டிருந்த தகவல்கள் தவறானவை என்ற செய்தியை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.