இந்தியா

“போலி செய்திகள் அதிக ஆபத்தானவை” - பிரகாஷ் ஜவடேகர்

webteam

பணம் தரப்பட்டு பரப்பப்படும் செய்திகளை விட போலி செய்திகள் அதிக ஆபத்தானவை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‌பிடிஐ செய்தி நிறுவன செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரகாஷ் ஜவடேகர், குழந்தை கடத்தல் கும்பல் குறித்து வாட்ஸ் அப்பில் பரவிய வதந்திகளால் 20 முதல் 30 பேர் பொதுமக்களால் அடித்துக்கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஊடக சுதந்திரத்திற்கு மத்திய அரசு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என அவர் கூறினார். 

அதே வேளையில் ஹாட் ஸ்டார், நெட் ஃப்ளிக்ஸ் போன்ற இணையதள நிகழ்ச்சி ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். பணம் தரப்பட்டு பரப்பப்படும் செய்திகளை விட போலி செய்திகள் அதிக ஆபத்தானவை என்றும், இவற்றை முறியடிக்க அரசும் ஊடகங்களும் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.