இந்தியா

FACT CHECK : ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் பெற மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகையா?

JananiGovindhan

ரயில் சேவையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் பெறுவதில் இந்தியன் ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் அது எதிர்வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள பதிவுகள் வைரலாகி வருகிறது.

அதன்படி பகிரப்பட்ட பதிவில் 60 வயதை எட்டிய ஆண்களுக்கு ரயில் சேவையில் டிக்கெட் பெறுவதில் 40 சதவிகிதமும், 58 வயதை எட்டிய பெண்களுக்கு 50 சதவிகிதமும் சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவுகள் மக்களிடையே வைரலானதால், “மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வரும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது. இந்தியன் ரயில்வே அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை” எனக் குறிப்பிட்டதாக PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே ரயில்வே தொடர்பான அறிவிப்புகள், தகவல்களை பகிரும் ஃபேஸ்புக் பக்கமான Rail Mail என்ற பக்கத்திலும் மூத்த குடிமக்களுக்கான ரயில்வேயின் சலுகைகள் மீண்டும் கொண்டு வரப்போவதாக அண்மையில் பதிவிட்டிருந்தது.

அதன் பின்னர், மூத்த குடிமக்களுக்கான சலுகை குறித்து இந்தியன் ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தவறான தகவல் கொடுக்கப்பட்டதற்கு மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பரவலுக்கு முன்பு மூத்த ஆண் மற்றும் திருநங்கை குடிமக்களுக்கு 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் ரயில் டிக்கெட்டில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: