ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய கலாசாரத் திருவிழாவால் பாதிப்படைந்த யமுனை நதிக்கரையை சீர்ப்படுத்த 10 வருடம் ஆகும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
உலக கலாசார விழா என்ற பெயரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, யமுனை
நதிக்கரையில் கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. கடந்த வருடம் மார்ச் 11 முதல் 13 வரை
இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களும்
பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, யமுனை நதிக்கரையின் நீர்பரப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. விவசாயிகளின் விளைநிலங்களும் அபகரிக்கப்பட்டன.
அப்பகுதியில் நிறைந்திருந்த மரங்கள், காடுகள் முழுவதும் அழிக்கப்பட்டன. இந்த விழாவால் இதில்
நதிக்கரை பாழ்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரும் சர்ச்சை எழுந்ததை அடுத்து
நதிக்கரை சேதத்தை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
கலாசாரத் திருவிழாவால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்
என்பதோடு ரூ.42 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு
தெரிவித்துள்ளது. சஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள்
குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கலாசார திருவிழா நடத்தப்பட்ட யமுனை நதியின் 120 ஹெக்டேர்கள் (சுமார் 300 ஏக்கர்கள்) மேற்கு
வலது புறக்கரைப்பகுதி மற்றும் 50 ஹெக்டேர்கள் இடதுக்கரை சமவெளியும் சுற்றுப்புற சூழல் ரீதியாக
பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது என்று 47 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.