இந்தியா

காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம்

webteam

காதலிக்கு தன் காதலர் தின பரிசாக தன் மனைவியை கொலை செய்துவிட்டு அடையாளங்களை மாற்றி 15 வருடங்களாக ஜாலியாக சுற்றித்திருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தருண். இவர் பல ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வந்துள்ளார். 2003ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவருடன் தருணுக்கு திருமணமாகியுள்ளது. மணமான 3 மாதத்தில் தருணின் மனைவி இறந்து போக தனது மனைவியை கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. தனது காதலிக்கு காதலர் தின பரிசாக மனைவியையே தருண் கொலை செய்துள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்தனர். இந்தச் செய்தி குஜராத் முழுவதும் பரவவே தருண் அகமதாபாத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய காவல்துறையினர் ''தப்பிச்சென்ற தருண் டெல்லியிலும், புனேவிலும் வேலை பார்த்துள்ளார். தனது பெயரை ப்ரவீன் என மாற்றி தனது அடையாளங்களையும் மாற்றியுள்ளார். தனது காதலி திருமணம் செய்துகொள்ளாமல் போகவே புனேவில் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 மகன்களும் உள்ளனர். பிறகு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். நல்ல சம்பளம், நல்ல வேலை என சந்தோஷமாக தருண் வாழ்ந்து வந்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.

(கொலை செய்யப்பட்ட தருணின் மனைவி )

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு போலீசார் கொடுத்த தகவலின்படி, விசாரணையில் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் தருணின் தாயார் அன்னம்மாவை போலீசார் விசாரிக்கத்தொடங்கியுள்ளனர். அன்னம்மா அடிக்கடி கேரளாவுக்கும் பெங்களூருவுக்கும் சென்று வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவுக்கு ஏன் செல்கிறார் என்ற கோணத்தில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை நடத்திய போது அது தனியார் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணாக இருந்துள்ளது. அதனைத் தொடர்பு கொண்ட நபர் குறித்து விசாரணை நடத்திய போது தருண் பெயர் மாற்றம் செய்துகொண்டதால் போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. ஆனால் தீவிர விசாரணை செய்த போலீசார் போலி பெயரில் தருண் வேலை பார்த்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கிரண் சவுத்ரி, கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தருணின் அலுவலகத்திற்கே ஊழியர் வேடத்தில் சென்று தருணை கையும் களவுமாக கைது செய்துள்ளார். கைதுக்கு பின்னர் வாக்குமூலம் அளித்த தருண் மனைவியை தானே கொலை செய்ததாகவும், அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.