இரவு நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை!
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நேற்று மாலை தொடங்கிய இப்போராட்டம் தற்போதும் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்தி வரும் எம்.பி.க்களுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களை பாடியதுடன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். இரவு நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை என அதில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.தோலா சென் தெரிவித்தார்.
தங்கள் போராட்டம் காலவரையறையின்றி நடைபெறும் என திரிணமூல் எம்.பி.டெரக் ஓ பிரையன் தெரிவித்தார். எம்.பி.க்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹர்வன்ஷ் டீ கொண்டு வந்தார்.