இந்தியா

ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ-வின் கணவர் தீபக் கோச்சார் கைது!

JustinDurai

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சார் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2012-ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளரான அர்விந்த் குப்தா குற்றம்சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை வங்கி நிர்வாகம் அமைத்தது. அப்போது, சந்தா கோச்சார் விடுமுறையில் அனுப்பப்பட்டார். இந்த நிலையில், சந்தா கோச்சார், தனது விடுமுறைக் காலம் முடிந்த பிறகு பணியில் சேராமல், அக்டோபர் மாதத்தில் பதவியை ராஜினாமா செய்தார். வங்கியும் இவரது ராஜினாமாவை ஏற்று, அவருக்குப் பதிலாக சந்தீப் பாக்‌ஷியை அப்பொறுப்பில் அமர்த்தியது.

கடந்த வாரம் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் வங்கி விதிகளை மீறி சந்தா கோச்சார் நடந்து கொண்டது உறுதியானது. வீடியோகான் நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் பணமோசடி தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தா கோச்சாரிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டு உள்ளார். நாளை டெல்லியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.