இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை

Veeramani

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்தியப் புலனாய்வுத் துறையின் எஃப்ஐஆர் படி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக 1999 ஜூலை 24 முதல் மார்ச் 5 2005 வரை செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக  ரூ 1,467 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல வளாகங்கள், குடியிருப்புகள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.



குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தினருக்கும் மேற்படி சொத்துக்களுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஓம் பிரகாஷ் சவுதாலா வருமானத்துக்கு அதிகமாக 189.11 சதவீத சொத்துக்களை குவித்தது உறுதியானது என்று தெரிவிக்கப்பட்டது.

ஓம் பிரகாஷ் சவுதாலா இந்திய தேசிய லோக்தளத்தைச் சேர்ந்த ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆறாவது துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.



1999-2000 காலகட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் 3,206 இளநிலை அடிப்படை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் 53 பேர் மீது ஜூன் 2008 இல் குற்றம் சாட்டப்பட்டது. ஜனவரி 2013 இல், டெல்லி நீதிமன்றம் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சிங் சவுதாலா ஆகியோருக்கு ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஓம் பிரகாஷ் சவுதாலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து ஜூலை 2, 2021 அன்று திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.