இந்தியா

"மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்" - பிரதமர் மோடி

"மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்" - பிரதமர் மோடி

JustinDurai

மிகவும் கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம் என்றும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி 'மன் கி பாத்' (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடனும் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ''கொரோனா பெருந்தொற்றினால் நமது அன்புக்குரியவர்களில் பலர் நம்மை விட்டு சென்றுவிட்டனர். நமது சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஓராண்டு காலமாக, இந்த தொற்றுநோயை சமாளிப்பது தொடர்பாக அவர்கள் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர். தற்போதைய கொரோனா நிலைமையைச் சமாளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி அனுப்பியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடையலாம். மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்'' என்று பேசினார்.