ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வரும் 11-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கார்த்தி வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
கார்த்தி சிதம்பரம் தனது சொத்துக்களை விற்க முயற்சித்ததாகவும், அதனால் அவரது சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவர் ஆஜராகும் போது அளிக்கும் விளக்கத்தை, விசாரணை அதிகாரி பதிவு செய்வார் என சம்மனில் கூறப்பட்டுள்ளது.