Asha Bhosle  web
இந்தியா

20 மொழி.. 12,000 பாடல்கள்.. 80 ஆண்டுகால பயணம்.. மறைந்தார் இசை மேதை ஆஷா போஸ்லே!

ஆஷா போஸ்லேயின் மறைவு இசை உலகின் ஈடுசெய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது .

INIYA FRANK

இந்திய இசையுலகின் பொற்காலத்தை உருவாக்கிய ஆஷா போஸ்லே, 92-வது வயதில் மும்பையில் பல உறுப்புகள் செயலிழப்பால் காலமானார். எட்டு தசாப்தங்களாக 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி, கின்னஸ் சாதனை படைத்த அவர், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய இசையுலகின் ஒரு பொற்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. தனது காந்தக் குரலால் எட்டு தசாப்தங்களாக ஒட்டுமொத்த தேசத்தையும் கட்டிப்போட்டிருந்த இசைக்குயில் ஆஷா போஸ்லே (Asha Bhosle) இன்று தனது 92-வது வயதில் காலமானார். மறைந்த இசைஅரசி லதா மங்கேஷ்கரின் (Lata Mangeshkar) சகோதரியான ஆஷா காலமான செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Asha Bhosle

கடந்த சனிக்கிழமை மாலை கடும் சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரிச் கேண்டி (Breach Candy Hospital) மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்குப் பல உறுப்புகள் செயலிழந்ததால் (Multi-organ failure) இன்று மதியம் உயிர் பிரிந்ததாக மருத்துவர் பிரதீத் சம்தானி (Dr. Pratit Samdani) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதனை அவரது மகன் ஆனந்த் போஸ்லே (Anand Bhosle) உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, அவரது உடல்நிலை குறித்துப் பேத்தி ஜனாய் போஸ்லே (Zanai Bhosle) இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு, "பாட்டிக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா (Pneumonia) பாதிப்புகள் இருக்கலாம்; ரசிகர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.

Lata Mangeshkar & Asha Bhosle

1933-ம் ஆண்டு பிறந்த ஆஷா போஸ்லே, தனது 9-வது வயதிலேயே பாடத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகால இசைப்பயணத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 2011-ஆம் ஆண்டு, உலகிலேயே அதிக பாடல்களைப் பதிவு செய்த கலைஞர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். "தில் சீஸ் கியா ஹை" (Dil Cheez Kya Hai), "பியா து அப் தோ ஆஜா" (Piya Tu Ab To Aaja), "சுரா லியா ஹை" (Chura Liya Hai) மற்றும் "மேரா குச் சாமான்" (Mera Kuchh Saaman) போன்ற அவரது ஹிந்திப் பாடல்கள் இந்திய இசையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு "பத்ம விபூஷண்" மற்றும் "தாதாசாகேப் பால்கே" விருதுகளை வழங்கி கௌரவித்தது. இதுதவிர 2 தேசிய விருதுகளையும், பல பிலிம்பேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

தமிழ் திரையிசையிலும் ஆஷா போஸ்லேவின் தடம் ஆழமானது. இளையராஜா (Ilaiyaraaja) இசையில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் பாடிய "செண்பகமே செண்பகமே" (Shenbagame Shenbagame) பாடல் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தொடர்ந்து "நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி", "வளையோசை", "ஓ பட்டர்ஃபிளை", "மஞ்சக்காட்டு மைனா", "மௌனமே உன் இடம்", "செவ்வந்தி பூ மால கட்ட" மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையில் "செப்டம்பர் மாதம்", "ஓ பேபி டோன்ட் கோ" (Oh Baby Don't Go), "கொஞ்ச நேரம்", "வெண்ணிலா வெண்ணிலா" எனப் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

Asha Bhosle with granddaughter Zanai 

ஆஷா போஸ்லேவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அன்னாரின் உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.