இந்தியா

பீகார் மூளை காய்ச்சல் உயிரிழப்பு 141 ஆக உயர்வு

webteam

பீகாரில் மூளை காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறி யப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதன் காரணமாக அங்கு 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், நோயை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். மத்திய சுகாதரத்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி தலைமையிலான குழுவினரும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.