இந்தியா

''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து

''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து

webteam

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை ஒரு பிழை என்றும் அந்த காலகட்டத்தில் நடந்தது தவறானது எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி என்கிற இரும்புப் பெண்மணி சர்வ வல்லமை கொண்ட தலைவராக இந்தியாவின் அசைக்க முடியாத பலமாக கருதப்பட்ட காலம். 1966 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்ற நாள் தொடங்கி இந்திரா காந்தி அதிகார மையமாகவே இருந்தார். 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவுபட்டபோதும், இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அதிக பலம் மிக்கதாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தலில் அவர் முறைகேடுகளை செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குபின் வந்த தீர்ப்பில் இந்திரா காந்தி வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இந்திரா காந்தியை பதவியில் இருந்து விலகுமாறு கோரி பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. ஜெயப்பிரகாஷ் நாராயண் , மொரார்ஜி தேசாய், ஜிவத் ராம் கிருபாளனி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில்தான், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி, அரசுப் பணியாளர்களின் போராட்டத்தால் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என்றும் கூறி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யுமாறு அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவுக்கு, இந்திரா காந்தி கடிதம் எழுதினார். இதையேற்று ஜூன் 25 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனமானது. எமர்ஜென்சி எனும் கரும்புள்ளி என உலக நாடுகள் கருத்துகளை பதிவிட்டன. இந்நிலையில் எமர்ஜென்சி குறித்து ராகுல்காந்தி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக பேராசிரியர் கவுஷிக் பாசுவுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது நெருக்கடி காலம் தவறானது என இந்திராகாந்தியே கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த நெருக்கடி நிலை தற்போதைய சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற முயற்சி செய்ததில்லை என ராகுல் காந்தி கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ அதன் உறுப்பினர்களை கொண்டு நாட்டின் ஜனநாயக அமைப்புகளை நிரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.