ஜம்மு - காஷ்மீரில் தொகுதி வரையறை பணிகளை துரிதப்படுத்தி விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் உடனான ஆலோசனைக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து மக்களாட்சி அமைந்தால்தான் அங்கு வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே தங்களின் முக்கியப் பணி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, சிறந்த காஷ்மீரை உருவாக்குவதற்கான நடவடிக்கையே அம்மாநில அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரை வளமானதாக்க அங்குள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.