மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் டிஜிபி மற்றும் மூன்று மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவிர, அவ்விடத்திற்கு புதிய அதிகாரிகளையும் நியமித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் டிஜிபி மற்றும் மூன்று மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் தலைமைச் செயலாளரை நீக்கி, அந்தப் பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளது. நந்தினி சக்ரவர்த்திக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஷ்யந்த் நரியாலா தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும், அதேநேரத்தில் பியூஷ் பாண்டேவுக்குப் பதிலாக உயர் போலீஸ் அதிகாரி சித்த் நாத் குப்தா டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தவிர, தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளிலிருந்தும் நந்தினி சக்ரவர்த்தி விலக்கி வைக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சுப்ரதிம் சர்க்காருக்குப் பதிலாக, மூத்த அதிகாரி அஜய் குமார் நந்த் கொல்கத்தா காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அஜய் முகுந்த் ரனாடே கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (சட்டம் மற்றும் ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் தேர்தல் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரமும் அங்கு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.