இந்தியா

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி

webteam

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளின் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தான் பங்கேற்கப்போவதில்லை எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அசோக் லவாசா எழுதியுள்ள கடிதத்தில், ''மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறைகளை மீறினர். அவர்கள் மீதான 6 புகார்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. அதனால் இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை'' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து மோடி மீது புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். 

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 6 வழக்குகளில் 4 வழக்கில் மோடிக்கு எதிராக லவசா வாக்களித்தார்.  அதேபோல் அமித் ஷாவிற்கு எதிரான அனைத்து வழக்கிலும் அசோக் லவசா அவருக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.