இந்தியா

‘கடையை திறந்து பான் மசாலா கொடுக்க முடியுமா? முடியாதா?’: கொலையில் முடிந்த போதைப்பழக்கம்

‘கடையை திறந்து பான் மசாலா கொடுக்க முடியுமா? முடியாதா?’: கொலையில் முடிந்த போதைப்பழக்கம்

jagadeesh

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் பான் மசாலா கடையை திறக்க மறுத்த முதியவர் ஒரு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொது மக்களும் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் புகையிலை விற்பனை, மது விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் புகையிலை மற்றும் மது பழக்கம் கொண்டவர்கள் கடும் மனச்சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதன் விளைவாக கான்பூரில் ஒரு கொலைச் சம்பவமே அரங்கேறியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நவீன் நகர் எனும் பகுதியில் பான் மசாலா கடையை நடத்தி வருபவர் பிரேம் நரேன் திவாகர் (60). இவர் கடையின் அருகே வசிப்பவர் நிதின். ஏப்ரல் 14 ஆம் தேதி நிதின் என்பவர் பிரேமிடம் கடையை திறந்து தனக்கு பான் மசாலா கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு பிரேம் ஊரடங்கு இருப்பதால் கடையை திறக்க முடியாது என கூறியுள்ளார்.

இதற்கு விடாப்பிடியாக தனக்கு பான் மசாலா கொடுத்தே தீர வேண்டும் என்று நிதின் பிடிவாதமாக இருந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்பு, இது கைகலப்பாக மாறியது, அப்போது நிதின் முதியவரான பிரேமை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பிரேம் நிலைக் குலநை்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கடுமையாக தாக்கிய நிதின் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்த முதியவர் பிரேமை சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடுமையாக தாக்கப்பட்டதால் சுயநினைவை இழந்த பிரேம், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கான்பூர் போலீஸார் குற்றவாளியான நிதினை தேடி வருகின்றனர்.