model image
model image twitter
இந்தியா

சக்கர நாற்காலி கிடைக்காமல் உயிரிழந்த முதியவர்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

Prakash J

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதிய தம்பதியொருவர், கடந்த பிப்.12ஆம் தேதி, நியூயார்க்கிலிருந்து AI-116 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். அப்போது, விமான நிலையத்தின் immigration பகுதிவரை செல்வதற்கு இவர்கள் இருவருக்கும் 2 சக்கரநாற்காலிகள் தேவைப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நாற்காலி மட்டுமே இருந்துள்ளது. இருவருக்குமே சக்கர நாற்காலி தேவையென அவர்கள் முன்பதிவு செய்திருந்தபோதும், ஒன்றுமட்டுமே கிடைத்துள்ளது.

model image

இதனால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர், கிடைத்த அந்த ஒரு சக்கர நாற்காலியில் தனது 76 வயது மனைவியை அமரவைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து விமான நுழைவு வாயில் வரை சுமார் 1.5 கிமீ தூரத்துக்கு நடந்தே சென்றுள்ளார். இறுதியில் நுழைவு வாயிலில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவர். உடனடியாக அங்கிருந்தோர் விமான நிலைய மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், “சக்கர நாற்காலியின் தேவை அதிகமாக இருப்பதால், சற்று அந்த தம்பதியை காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் தனது மனையுடன் நடந்து செல்ல முடிவு செய்து அங்கிருந்து சென்று விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் சம்பவம் குறித்து விளக்கம் அளித்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானம் ஏறும் மற்றும் இறங்கும்போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!