இந்தியா

‘எல் நினோ’ பாதிப்பினால் தென்மேற்குப் பருவ மழை குறைகிறதா?

webteam

இந்தியாவில் இந்தாண்டு பெய்யவுள்ள தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தைவிட மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் எனத் தனியார் வானிலை ஆய்வு மையமான 'ஸ்கைமெட்' நிறுவனம் கணித்துள்ளது. இதனையடுத்து இதற்கு காரணம் பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றமே என அந்நிறுவனம் கணித்துள்ளது. இந்தச் சூழலில் பசிபிக் கடலில் ஏற்படும் ‘எல் நினோ’குறித்தும் பருவமழை குறைதற்கான காரணம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

‘எல் நினோ’ என்றால் என்ன?

நமது பூமியின் பெரும் பகுதி கடலால் சூழ்ப்பட்டுள்ளது. அதனால் நிலத்தில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றத்திற்கும் கடலுக்கும் அதிக தொடர்பு உள்ளது. இந்த மாற்றத்தை குறிக்கும் வானிநிலை சார்ந்த அறிவியல் சொல்லாக 'எல் நினோ' பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வெப்பநிலை சார்ந்த மாற்றத்தை குறிப்பதே ‘எல் நினோ’ஆகும்.  

பொதுவாக பசிபிக் பெருங்கடலில் வீசும் காற்று கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வீசும். இதனால் பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும். அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் மழை பொழிவு ஏற்படும்.

ஆனால் 'எல் நினோ' காலத்தில் இந்தச் சூழ்நிலை அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதாவது பசிபிக் கடலின் மேற்குப் பகுதி குளிர்ந்த நிலையிலும், அதன் கிழக்குப் பகுதி அதிக வெப்பத்துடனும் காணப்படும். இதனால் பசிபிக் கடலில் காற்று மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசை நோக்கி காற்று வீச தொடங்கும். 

இதனால் மேற்கு பசிபிக் பகுதியில் மழைப்பொழிவு குறையும். அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வறட்சி ஏற்படும். அதேபோல பெரூ, இக்வேடார், அமெரிக்கா, மெக்ஸ்சிகோ ஆகிய பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்படும்.

 பசிபிக் பெருங்கடலில் இந்த வெப்ப நிலை மாற்றம் சுழற்சி முறையில் இரண்டு முதல் ஏழு வருட இடைவெளிகளில் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் சுழற்சி நிலைக்கு 'எல் நினோ சதர்ன் ஆசிலேஷன்' (El Nino Southern Oscillation)எனப் பெயரிடப்பட்டுள்ளது. 


‘எல் நினோ’வினால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு?

‘எல் நினோ’வினால் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இந்தியாவும் ஒன்று.  ஏனென்றால் ‘எல் நினோ’வினால் இந்தியாவில் பெய்யும் பருவமழையின் அளவில் மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாகக் கோடை காலத்தின்போது பெய்யும் தென்மேற்குப் பருவ மழையின் அளவு வெகுவாகக் குறையலாம்.  இந்தியாவில் பொய்யும் வருட மழை அளவில் 70% மழை தென்மேற்குப் பருவ மழை காலத்தில் பெய்வது வழக்கம். மேலும் தென்மேற்குப் பருவமழையை நம்பிதான் விவசாயிகள் பயிரிடுவார்கள். அந்த மழை போதிய அளவில் பெய்யவில்லை என்றால் விவசாயம் பாதிப்படையும். இதனால் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். 


இந்தியாவில் பருவமழை குறைவுக்கு ‘எல் நினோ’ மட்டுமா காரணமா?

ஒருபுறம் ‘எல் நினோ’வினால் இந்தியாவில் பருவமழை பொய்த்து போனது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அறிவியல் விஞ்ஞானிகள் பருவமழைக்கும் ‘எல் நினோ’ ஆகிய இரண்டிற்கும் தொடர்பு உள்ளதாக எந்த ஒரு ஆதரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

உதராணமாக 1950 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை மொத்தம் 14 வருடங்களில் ‘எல் நினோ’ வெப்பநிலை மாறுபாடிற்கான பாதிப்பு இருந்துள்ளது. அவற்றில் வெறும் 5 வருடங்களில் மட்டுமே இந்தியாவில் வறட்சி நிலவியுள்ளது.  அதிலும் குறிப்பாக 1997-98ல் கடுமையான ‘எல் நினோ’ பாதிப்பு நிலவிய காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழை இயல்பான அளவிலிருந்து அதிகமாகவே பெய்துள்ளது. அதேபோல 2002ஆம் ஆண்டு ‘எல் நினோ’ இல்லாத போதும் இந்தியாவில் பருவமழை மிகவும் குறைந்தே காணப்பட்டது.  

         
ஆகவே அறிவியல் அறிஞர்கள் இந்தியாவில் குறைந்துவரும் பருவ மழை மாறுதலுக்கு ‘எல் நினோ’மட்டும் காரணமல்ல எனக் கணித்துள்ளனர். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக் கால வெப்பநிலை, இமய மலை மீது படர்ந்துள்ள பனி, இந்தியப் பெருங்கடலில் நிலவும் Dipole எனப் பல காரணிகளை கணித்துள்ளனர். இமய மலை மீது படர்ந்துள்ள பனியின் அளவு குறைவாக இருந்தால் இந்திய துணைக்கண்டம் அதிகமாக வெப்பமாகி மழை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படும். 

அதேபோல இந்தியப் பெருங்கடலில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் வெப்ப நிலை மாற்றத்தை Indian ocean Dipole கூட பருவ மழையின் அளவை தீர்மானிக்கும். அதாவது இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதி அதிக வெப்பத்துடன் இருந்தால் அது பருவமழைக்கு சாதகமான சூழ்நிலையாக அமையும். இதற்கு மாறாக இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி  அதிக வெப்பத்துடன் இருந்தால் பருவமழையின் அளவு குறைந்துவிடும்.