இந்தியா

`விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் '- எடப்பாடி பழனிசாமி

நிவேதா ஜெகராஜா

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; உண்மை தர்மம் வென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் அதிக குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், “கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும்” என்றார்.

தொடர்ந்து, “அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் உண்மை தர்மம் நீதி வென்றுள்ளது. விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.

ஏற்கெனவே தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்சனைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளார். இருப்பினும்கூட, எனது தொகுதி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்சனைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது” என்றார்.