ED
ED File image
இந்தியா

பணமோசடி வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலக்கத்துறை சோதனை!

webteam

டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமனதுல்லா கானின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி ஓக்லா பகுதியில் அமைந்துள்ள அமானதுல்லாவின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அமானதுல்லா கான் ஓக்லா தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், டெல்லி வக்ஃப் வாரிய தலைவராகவும் உள்ளார்.

டெல்லி வக்ஃப் வாரியத்தில் சட்ட விரோதமான முறையில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அவர் மீது ஏற்கனவே டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான மத்திய புலனாய்வு பிரிவு ஆகியவை சார்பில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

delhi cm

இந்த வழக்கில் வக்ஃப் வாரியத் தலைவர் பதவியில் முறைகேடு, நிதி முறைகேடு, அதிகாரப் பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய வழக்குகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமானதுல்லா ஊழல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எஃப்ஐஆரில் அவர், டெல்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக பணிபுரிந்தபோது, விதிமுறைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்ட விரோதமாக பணியமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அவரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர், அவரை கைது செய்து தற்போது விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.