இந்தியா

மேற்கு வங்கம்: நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் 2 அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Veeramani

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் மேற்குவங்க அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி எஸ்எம்ஹெச் மிர்சா ஆகியோர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சுப்ரதா முகர்ஜி, ஹக்கீம் மற்றும் மித்ரா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதால், மேற்குவங்க சட்டசபை சபாநாயகர் அலுவலகம் மூலம் மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 16 ஆம் தேதி இவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. கடந்த மே மாதம் ஹக்கீம், முகர்ஜி, மித்ரா மற்றும் சாட்டர்ஜி ஆகியோரை கைது செய்தது, நான்கு நாட்களுக்குப் பிறகு இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் நாரதா செய்தி நிறுவனர் மேத்யூ சாமுவேல் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நடத்தினார். சாமுவேல் ஒரு கற்பனையான நிறுவனத்தை உருவாக்கி, உதவிக்காக பல திரிணாமுல் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைவர்களை அணுகினார். அவர்களில் பலர் டிவி காட்சிகளில் பணத்தை ஏற்றுக்கொண்டதாக காட்டப்பட்டது, இந்த வீடியோக்கள் 2016 ஆம் ஆண்டு வெளியானது.