இந்தியா

மத போதகர் ஜாகீர் நாயக் சொத்துக்கள் முடக்கம்

webteam

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக், சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது, பயங்கரவாதச் செயல் களுக்கு நிதியுதவி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும் ரத்து செய்யப்பட்ட தனது பாஸ்போர்ட்டை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் மும்பை மற்றும் புனேவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான ரூ.16 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. பணமோசடி வழக்கில் அவரது சொத்துகளை ஏற்கனவே 2 முறை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  இதுவரை அவரது ரூ.50 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.