மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா குற்றஞ்சாட்டியிருந்தார். தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது என புகார் தெரிவித்த அவர், இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
பாஜகவை தாண்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக தன்னை அணுகின என்றும், ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது என்றும் கூறினார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து சட்டரீதியாக அணுகுவது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும், 2010-ல் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் தரநிலை அடிப்படையிலேயே இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.