இந்தியா

பெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு!

JustinDurai

கேரளாவில் பெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூசி, அதனை பேஸ்புக்கில் நேரலை செய்தனர் பெண்கள்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் பி. நாயர். இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

குறிப்பாக பிரபல பெண் சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி, சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய ரகானா பாத்திமா, திருப்தி தேசாய், பிந்து அம்மினி, கனகதுர்கா உட்பட பலர் குறித்தும் ஆபாசமாக பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த வீடியோக்களை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.ஏற்கனவே இது தொடர்பாக செயற்பாட்டாளர் ஸ்ரீ லட்சுமி என்பவர் மாநில பெண்கள் ஆணையம், சைபர் செல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தலைமையில் மூன்று பெண்கள் விஜய் பி. நாயர் வீட்டிற்குச் சென்று அவர் மீது கரி ஆயிலை ஊற்றினர். தொடர்ந்து யூடியூபில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க கூறினார். ஆனால் அவர் மறுத்தார். பின்னர் அவர்களது மிரட்டலுக்கு பயந்து இனி பெண்களுக்கு எதிரான ஆபாச பதிவுகளை போட மாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

தொடர்ந்து பெண்கள் அவர் யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களை கட்டாயப்படுத்தி அழித்தனர். அவர்கள் இது ஃபேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பினர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.