இந்தியா

ஆந்திரா: வகுப்பறையில் மது அருந்திய ஆசிரியர் சஸ்பெண்ட்

JustinDurai

ஆந்திராவில் பள்ளி வகுப்பறையில் மது  அருந்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணபுரத்தில் உள்ள மண்டல் பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோடேஸ்வர ராவ். சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மது அருந்தியபடியும் உணவருந்தியபடியும் இருக்கும் இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது. கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோடேஸ்வர ராவ் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியது நிரூபணமானது. இதையடுத்து கோடேஸ்வர ராவை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

புகாருக்குள்ளான ஆசிரியர் கோடேஸ்வர ராவ் தினமும் பள்ளியில் வைத்து மது அருந்துவார் என்றும் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வார் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையடுத்து கோடேஸ்வர ராவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.