இந்தியா

இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணர் பத்மாவதி கொரோனாவுக்கு காலமானார்

webteam

இந்தியாவின் முதல் இதய நோய் சிகிச்சை பெண் மருத்துவர் எஸ்.பத்மாவதி, தன் 103-வது வயதில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார். அவர் கடந்த பதினோரு நாள்களாக தேசிய இதய நோய் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

உலகம் முழுவதும் ஸ்பேனிஷ் ப்ளூ நோய் பரவுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு , அன்றைய பர்மாவில் 1917ம் ஆண்டு பிறந்தார். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் 1942ம் ஆண்டு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

"மருத்துவர் பத்மாவதி, மிகச்சிறந்த இதயநோய் சிகிச்சை நிபுணர். இந்தியாவின் முதல் பெண் இதயநோய் சிகிச்சை நிபுணரான அவர் காட்மதர் ஆப் கார்டியாலஜி எனப் பெருமையுடன் புகழப்பட்டவர், கொரோனா தொற்றால் மறைந்துவிட்டார்" என்று தேசிய இதயநோய் மையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியா திரும்பிய பத்மாவதி, பல பணிகளுக்குப் பிறகு 1967-ம் ஆண்டு டெல்லியில் உள்ள மெளலானா மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இங்கு இதய நோய் சிகிச்சைக்கு ஒரு தனித் துறையை உருவாக்கினார். பின்னர் இதய சிகிச்சையில் டிப்ளமோ படிப்பைத் தொடங்கினார். அதுபோல் முதல் இதய நோய் சிகிச்சைப் பிரிவையும் இந்தியாவில் தொடங்கினார்.

மருத்துவர் பத்மாவதிக்கு 1967ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 1992ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 1962ம் ஆண்டு அகில இந்திய இதய அறக்கட்டளை நிறுவினார். பின்னர், 1981ம் ஆண்டு தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தை தொடங்கினார்.