santhosh bangar
santhosh bangar ட்விட்டர்
இந்தியா

உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்காவிட்டால் சாப்பிடாதீங்க: சிவசேனா எம்.எல்.ஏ.வின் வினோத உத்தரவு

PT digital Desk

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்.எல்.ஏ ஒருவர், பெற்றோர் தனக்கு வாக்களிக்காவிட்டால் குழந்தைகள் இரண்டு நாட்களுக்கு சாப்பிடக்கூடாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பித்த ஒரு வாரத்திற்குள் கலம்னூரி எம்.எல்.ஏ சந்தோஷ் பங்கரின் கருத்துக்கள் வந்துள்ளன.
"அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு சாப்பிட வேண்டாம்" என்று பங்கர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோவில் பள்ளி குழந்தைகளிடம் கூறுவதைக் காணலாம்.

குழப்பமடைந்த 10 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம், அவர்களின் பெற்றோர்கள் சாப்பிட மறுப்பது குறித்து கேள்வி எழுப்பினால், "சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள், அதன் பின்னரே நாங்கள் சாப்பிடுவோம்" என்று பங்கர் கூறுவதைக் காணலாம்.
அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்கள் முன்னிலையில் என்ன சொல்ல வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கூறுமாறு எம்.எல்.ஏ குழந்தைகளிடம் கூறினார்.
பங்கரின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "பங்கர் பள்ளி மாணவர்களிடம் கூறியது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரானது, எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவின் கூட்டணி கட்சியில் இருப்பதால் மீண்டும் மீண்டும் குற்றவாளியாக இருந்து தப்பித்து வருகிறார். அவர் மீது பாரபட்சமின்றி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் விஜய் வதேட்டிவார், பங்கர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் பள்ளி குழந்தைகளிடம் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும்போது மாநில கல்வி அமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

பங்கர் இப்படியான சர்ச்சை கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கடந்த மாதம் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், பண்டிகை பேரணியின் போது வாளை காட்டியதாக கலம்னூரி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
2022 ஆம் ஆண்டில், தொழிலாளர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கேட்டரிங் மேலாளரை அவர் அறைந்த வீடியோ வைரலானது.