ட்ரம் புதியதலைமுறை
இந்தியா

ஒட்டுமொத்தமாக திருநங்கைகளை அமெரிக்க ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ட்ரம்ப் திட்டம்! வெளியான தகவல்

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம் பதிவி ஏற்றதும் இராணுவத்திலிருந்து திருநங்கைகள் வெளியேற்றப்படும் உத்தரவில் கையெழுத்திடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Jayashree A

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்றதும் அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகள் வெளியேற்றப்படும் உத்தரவில் கையெழுத்திடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். இவரின் பதவியேற்பு ஜனவரிமாதம் 20ம் தேதி நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகளை வெளியேற்றும் முக்கிய உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அவர் கடந்த முறை அதிபராக இருந்த போதும் திருநங்கைகள் இராணுவத்தில் சேர்வதை தடுத்தார். இருப்பினும் ஏற்கனவே இராணுவத்தில் பணியாற்றி வந்த 15000 திருநங்கைகளை அவர் வெளியேற்றவில்லை. தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்.

இந்நிலையில், தற்பொழுது மீண்டும் அதிபராக பதவியேற்றதும் திருநங்கைகள் புதிதாக பணியில் பணியாற்றுவதை தடுப்பதுடன் ஏற்கனவே பணியாற்றி வரும் பணியாளர்களையும் மருத்துவப்பரிசோதனை மற்றும் உடற்தகுதி அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான உத்தரவில் அவர் பதவியேற்றதும் கையெழுத்து இடப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பெண்கள் பணியமர்த்தப்பட்டால், அமெரிக்க ராணுவமானது சீர்குலையும் என்று அவர் வாதிட்டதாக பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இராணுவத்தில் மட்டுமல்லாது, அவர்களுக்கு கல்வி, விளையாட்டு, சுகாதாரம் போன்றவைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பள்ளிகளில் பாலின விழிப்புணர்வு குறித்த வகுப்பறைப் பாடங்களை தடை செய்ய விரும்புகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில், திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் வேலை மற்றும் கல்வி முதலிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுவது வேதனைத்தரும் செய்தியாக உள்ளது என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.