ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படவில்லை என, ஆளுநர் சத்யபால் மாலிக் அரசியல் கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இருந்து நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் ஆயுத கிடங்கில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமர்நாத் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டு, தரிசனம் முடித்த பக்தர்கள் விரைவாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தை அடுத்து சோபியான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்தச் சூழலில் தான் திடீரென காஷ்மீருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், விமானப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நோக்கில் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் ஆளுநர் சத்யபால் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காகவே காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிக்கப்படுவதாக கூறி, அவர்களை அமைதிப்படுத்தினார் ஆளுநர்.
அதற்கேற்றபடி, நாட்டின் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக பகீர் தகவல் வெளியானது. காஷ்மீர் அரசு சார்பில் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் யாத்திரையை தொடர்ந்து கிஸ்த்வார் பகுதியில் உள்ள துர்கை அம்மன் யாத்திரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளும் காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
இதனால், அடுத்தடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், இதுவரை எந்தவொரு அரசும் காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தியது இல்லை என்றும், முதல்முறையாக அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குலாம் நபி ஆசாத்.
இதற்கு பதில் அளித்த காஷ்மீர் ஆளுநர் , தற்போது வரை காஷ்மீரில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாலேயே சுற்றுலா பயணிகளை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாகவும், அவர்கள் கொல்லப்பட்டால் நிலவரம் மோசமாகிவிடும் என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
அதே சமயம் வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் சஸ்பென்ஸ் வைத்திருப்பது, மீண்டும் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டிருக்கிறது.