கடந்த சில நாட்களாக மலைப்பகுதி மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் பரவலான சேதம், இடையூறு மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகளை தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நிரம்பி வழியும் ஆறுகள், உடைந்த சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த பாலங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். இரு மாநிலங்களும் அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தநிலையில் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து குடியிருப்பாளர்கள் விலகி இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தவகையில், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால், 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மண்டி மாவட்டத்தில் இதனால், 14 பேர் இறந்துள்ளனர், 5 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 30 பேர் தற்போதுவரை காணவில்லை. மேலும், இறப்பு எண்ணிக்கை 78 ஐ தாண்டி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி நள்ளிரவில் மண்டி மாவட்டம் தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
இதனால், கிராமத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது. ஆனால், தக்க சமயத்தில் அங்கிருந்த நாய் ஒன்று எழுப்பிய எச்சரிக்கை குரல்தான் தற்போது 20 குடும்பங்களை சேர்ந்த சுமார் 67 பேரை காப்பாற்றியுள்ளது.
நிலச்சரிவுக்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்து சத்தம் எழுப்பியுள்ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த அதன் உரிமையாளர் நரேந்திரா தனது வீட்டின் சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார். ஆபத்தை உணர்ந்த அவர், உடனடியாக தனது குடும்பத்தினருக்கு வீட்டை விட்டு வெளியேறும்படி தகவல் அளித்துவிட்டு உடனடியாக கிராமத்தில் இருந்த மற்றவர்களையும் எழுப்ப விரைந்துள்ளார்.
பலத்த மழையையும் பொருட்படுத்தாத கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் பல வீடுகள் தரைமட்டமாயின. சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரிக்கை செய்ததால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், வெளியேறிய மக்கள் நைனா தேவி கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.