ஹைதராபாத்தில், இளைஞர் ஒருவருக்கு கடந்த 21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி ஒன்றை மருத்துவர்கள் வெளியே எடுத்து அசத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத், கரீம் நகரைச் சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் ஒருவர். அவர் 5 வயது இருக்கும்போது தற்செயலாக பேனா மூடி ஒன்றை விழுங்கியுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். எந்த உடல்நலக்கோளாறு ஏற்படாததால் பெற்றோர்கள் அப்படியே விட்டுள்ளனர்.
இந்தநிலையில்தான், 21 ஆண்டுகளுக்கு பிறகு அவரது உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு திவீர சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உடல் எடைக் குறைந்து கடுமையாக அவதியடைந்து வந்துள்ளார். இந்தநிலையில்தான், சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவரது நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பேனா முடியைதான், தற்போது 21 வருடங்களுக்கு பிறகு டாக்டர்கள் வெற்றிக்கரமாக அகற்றி உள்ளனர்.
இது குறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் சுபகர் நாதெல்லா கூறியதாவது: ” கடந்த 10 நாட்களாக நோயாளியின் நிலை மோசமடைந்து அடைந்தது. தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது என்றார்.
சி.டி., ஸ்கேன் எடுத்ததில் அவரது இடது கீழ் நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் ஒரு அடைப்பு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். ஆனால் உள்ளே ஒரு பேனா மூடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இன்னும் சில ஆண்டுகள் ஆகியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். ” என்று தெரிவித்தார்.
தற்போது நோயாளி முழுமையாக குணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.