amithsha pt
இந்தியா

அதிமுகவுடன் கூட்டணியா?... ’’ திமுகவை வேறோடு பிடிங்கி எறிய மக்கள் தயாராக உள்ளனர்! ” - அமித்ஷா!

கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் என்று அமித்ஷா ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார். அவர் என்ன பேசினார்... பார்க்கலாம்.

புதுடெல்லியில் நேற்றைய தினம் (28.3.2025) நடைப்பெற்ற, டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2025 ல் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமையுமா? என்பது குறித்தும் பேசினார்.

அதில் , “ தென்னிந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போது திமுக அரசின் கொள்கையால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. எனவே, வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும்.

தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும், மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அதை தொடங்கவும் இல்லை.. புத்தகங்களை தமிழ்மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய தயாராகவும் இல்லை.

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஏதாவது கருத்து தெரிவித்ததா?.. பிறகு எதற்காக இதை பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் வந்தது. காரணம் தேர்தல்.. ஐந்து ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்ட அவர்கள் ( திமுக) இப்போது திடீரென்று விழித்துக் கொண்டுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும் .அதற்கு, 0.0001 சதவீதம் கூட அநீதி நடக்க வாய்ப்பு இல்லை," என்று தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணியா?

மேலும், கூட்டணி குறித்த தெரிவித்த அவர், அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும், ’சரியான நேரம் வரும்போது, அதை தெரியபடுத்துவோம்.’ என்று தெரிவித்துள்ளார்..