இந்தியா

தமிழகத்தில் விற்கப்படும் பாலில் நச்சுத்தன்மை - அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

webteam

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டிலேயே AFLATOXIN எம்-1 என்ற நச்சுத்தன்மை கொண்ட பால் தமிழகத்தில்தான் அதிகம் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், பாலில் நச்சு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முறையாக ஆய்வு செய்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையையே தற்போதும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இது தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மையை அறிய ஏற்கெனவே அமைத்த குழு தீவிரமாக செயல்பட்டு உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது