டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவுடன் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், அரசியல் வட்டாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அவரது ராஜினாமா குறித்து, “ஒன்றன்பின் ஒன்றாக நடந்த தேர்வுகளில் ஏற்பட்ட தொடர் குழப்பங்களைக் கட்டுப்படுத்த பிரதான் தவறிவிட்டார். வரவிருந்த ஆபத்தை அவரால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை” என அவரது பதவி விலகலையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.
இதற்கிடையே, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாபெரும் வரவேற்பு, அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்த யூகங்களை மீண்டும் கிளப்பியுள்ளது. பாஜகவின் மிகவும் வலிமையான தலைவர்களில் ஒருவரான அவர் முதலமைச்சராவாரா என்கிற பேச்சும் அம்மாநில அரசியலில் எழுந்துள்ளது. ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மக்களவைத் தொகுதி எம்பியான தர்மேந்திர பிரதான், அம்மாநிலத்தில் பாஜகவின் அமைப்புரீதியான பலத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். அவர் ஏராளமான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் விசுவாசத்தைப் பெற்றிருப்பதோடு, மாநிலத்தில் ஒரு மாற்று அதிகார மையமாகவும் திகழ்கிறார்.
இத்தகைய சூழலில்தான், ஒடிசா சென்ற அவருக்கு மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எனப் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவரையே திக்குமுக்காட வைத்துள்ளனர். குறிப்பாக, மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசாங்கத்தின் 16 அமைச்சர்களில் ஐந்து பேரும், 21 கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவரை வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பைப் பார்த்த ஒடிசா மாநில பாஜக மூத்த தலைவர்கள் சிலர், ‘மாநிலத்தின் உயர் பதவியை பிரதானுக்கு வழங்க பாஜக திட்டமிடுகிறது’ எனக் கூற அது காட்டுத் தீயாய் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, ‘அவர் முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம்’ என்று சொல்லப்பட, அது ஒடிசாவின் அரசியல் வட்டாரங்களில் சிலரை பதற்றமடையச் செய்துள்ளது. இருப்பினும், தற்போதைக்கு பிரதானின் உடனடி எதிர்காலம் குறித்து எந்த உறுதியான தகவலும் பாஜக சார்பில் வெளியாகவில்லை. ஒருவேளை, அவரை சிலகாலத்துக்கு பாஜக தலைஅமை அமைதியாக வைத்திருக்கும் எனவும், அதன்பிறகு கட்சியில் பெரிய பதவியை வழங்கி அமைப்புப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஒடிசா சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, அப்போதே பிரதனின் பெயர் முன்னிலையில் இருந்தபோதும், கேயோன்ஜார் தொகுதியின் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மோகன் சரண் மன்ஜியை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.