இந்தியா

சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி! என்று வரை நடக்கிறது மாதாந்திர பூஜை?

webteam

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுதிக்கப்படுகின்றனர்.

நேற்று மாலை திறக்கப்பட்டபோது, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார். சபரிமலை தரிசனத்திற்காக "வெர்ச்சுவல் கியூ" மூலம் ஆன்லைன்  முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு, நிலக்கல் பகுதியில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் தரிசனம் முடிந்து அக்டோபர் 22ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடையடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. தற்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவும் நடந்து வருகிறது.