சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சரண கோஷங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து வைத்தார். இன்று முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு செவ்வாயன்று மாலை துவங்கி, ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தரிசனத்துக்கு வரும் ஒவ்வொருவரும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மேற்கொண்டுள்ளன.