உத்தரப் பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் விளக்கமளித்தார். குழந்தைகள் இறப்பு விவகாரத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி விசாரிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். கடந்த 9 ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதல்வர், இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.