இந்தியா

’6 பைக் இருந்தும் ஹார்லி- டேவிட்சன் வாங்கித் தரலையே...’ தற்கொலை செய்த மாணவன்!

webteam

ஆறு பைக், கார் இருந்தும் ரூ.14 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக்கை அப்பா வாங்கி தராததால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரம் அனட் பகுதியைச் சேர்ந்தவர் அஜி குமார். தொழிலதிபர். இவரது மனைவி லேகா. இவர்களுக்கு அகிலேஷ் (19) என்ற மகன், அகிலா என்ற மகள் உள்ளனர். தொழில் செய்வதற்கு வசதியாக இவர்கள் கட்டயிகோணம் பகுதியில் வசித்து வந்தனர். தம்பனூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்தார் அகிலேஷ்.

இவரிடம் விதவிதமான, விலையுயர்ந்த 6 பைக்குகள் உள்ளன. ஒரு சொகுசு காரும் இருக்கிறது. இந்நிலையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான ஹார்லி -டேவிட்சன் பைக் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார் அகிலேஷ். ஏற்கெனவே 6 பைக் இருப்பதால், அதை வாங்கிக் கொடுக்க மறுத்து வந்தாராம் அஜி குமார். இதனால் தந்தையிடம் பேசாமல் இருந்த அகிலேஷ், அம்மாவிடம் மட்டும் பேசி வந்துள்ளார். குறிப்பிட்ட சில மாதங்களில் அப்பா, அந்த பைக்கை வாங்கித் தந்துவிடுவார் என்று நம்பி இருந்தாராம் அகிலேஷ். கிடைக்காது என்று தெரிந்ததும் அவர் தற்கொலை செய்துள்ளார் என்கிறார்கள் போலீசார்.

நேற்று காலை அவரது படுக்கையறை கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த பின் நேற்று அனட் பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுபற்றி போலீசார் அகிலேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.